1690.‘ “கண்ணுள் மணிபோல் மகவை
     இழந்தும் உயிர் காதலியா,
உண்ண எண்ணி இருந்தால்,
     உலகோர் என் என்று உரையார்?
விண்ணின்தலை சேருதும் யாம்;
     எம்போல், விடலை பிரிய,
பண்ணும் பரி மா உடையாய்;
     அடைவாய், படர் வான்” என்னா.

     ‘கண் உள் மணி போல் மகவை இழந்தும் - கண்ணிற்குள்ளே
உள்ள கருமணிப் பாவைபோன்ற சிறந்த மகனை இழந்த பிறகும்;  உயிர்
காதலியா
- உயிர்மேல் ஆசை வைத்து; உண்ண எண்ணி இருந்தால் -
உண்பதற்கு நினைத்து  (உலகில் வாழ்ந்து) இருந்தால்;  உலகோர் என்
என்று  உரையார்? -
உலகில் உள்ளவர்கள் (எங்களை) என்னவென்று
பழியார்; யாம் விண்ணின்தலை சேருதும் - நாங்களும் (இறந்து) மேல்
உலகம்  சேர்கிறோம்;  பண்ணும்  பரிமா உடையாய் - அலங்கரிக்கப்
பெற்ற குதிரையை உடைய மன்னனே;  எம்போல் - எங்களைப் போல;
விடலை பிரிய - மகன் பிரிந்து செல்ல;  படர்வான் அடைவாய்’ -
அகன்ற வானுலகை அடைவாயாக;  என்னா - என்று   சொல்லி.

     உலகோரது பழிமொழிக்கு அஞ்சி யாங்கள் வானுலகு சேர்வோம்
என்று  மனைவியையும்,உளப்படுத்தி முனிவன் கூறினான் - ‘கண்ணிற்
கருமணி’ என்றான் மகனை;  இதுவரை இவர்களுக்குப்பார்வையாக
இருந்தவன் ஆதலின்.                                          85