1703. | ஆவும் அழுத; அதன் கன்று அழுத; அன்று அலர்ந்த பூவும் அழுத; புனல் புள் அழுத; கள் ஒழுகும் காவும் அழுத; களிறு அழுத; கால் வயப் போர் மாவும் அழுத; - அம் மன்னவனை மானவே. |
அம் மன்னவனை மான - (இராமன் பிரிவால் துயர் உறும்) தசரதனை ஒப்ப; ஆவும்அழுத - பசுக்கள் அழுதன; அதன் கன்று அழுத - அப் பசுக்களின் கன்றுகள் அழுதன; அன்று அலர்ந்த பூவும் அழுத - அப்போது மலர்ந்த பூக்களும் அழுதன; புனல் புள் அழுத- நீர்வாழ் பறவை இனங்கள் அழுதன; கள் ஒழுகும் காவும் அழுத - தேன் சிந்தும் மலர்ச்சோலைகள் அழுதன; களிறு அழுத - யானைகள் அழுதன; கால் வயப் போர் மாவும் அழுத- காற்றை ஒத்த வலிய போர் வல்ல குதிரைகளும் அழுதன. ஓரறிவுயிர் முதலாக ஐயறிவுயிர் வரை அனைத்தும் இராமனது பிரிவால் அழுதன என்பார் முதலும் முடிவும் கூறினார். 98 |