1729.‘வலக் கார் முகம் என் கையது ஆக,
     அவ் வானுளோரும்
விலக்கார்; வேர் வந்து விலக்கினும்,
     என் கை வாளிக்கு
இலக்கா எரிவித்து, உலகு எழினோடு
     ஏழும், மன்னர்
குலக் காவலும், இன்று, உனக்கு யான் தரக்
     கோடி’ என்றான்.

     ‘வலக் கார்முகம் - வலிமை படைத்த வில்;  என் கையது ஆக -
என்கையின்கண் இருப்பதாக;  அவ்வானுளோரும் - அந்தத் தேவர்களும்;
விலக்கார் -என்னைத் துணிந்து தடுக்கமாட்டார்; அவர் வந்து
விலக்கினும்
- (ஒருவேளை) அவர் வந்து தடுத்தாலும்; என் கை வாளிக்கு-
என் கையில் உள்ள அம்புக்கு;  இலக்கா -குறியாகும்படி;  எரிவித்து -
(அவர்களை) எரியச் செய்து;  உனக்கு -;  உலகு ஏழினோடுஏழும் -
பதினான்கு  உலகங்களும்;  மன்னர் குலக் காவலும் - அரசர் குலத்துக்
காவல்தொழிலாகிய சக்கரவர்த்தியாம் தன்மையும்; இன்று - இப்பொழுதே;
யான் தர- நான் கொடுக்க;  கோடி’ - கொள்வாய்;’  என்றான்-

     கார்முகம் - வில்.  தசரதன்  மன்னர்  மன்னன் ஆதலின்  ‘மன்னர்
குலக் காவலும்’இராமனுக் குரியதாக்குவேன் என்றான் இலக்குவன்.   124