1729. | ‘வலக் கார் முகம் என் கையது ஆக, அவ் வானுளோரும் விலக்கார்; வேர் வந்து விலக்கினும், என் கை வாளிக்கு இலக்கா எரிவித்து, உலகு எழினோடு ஏழும், மன்னர் குலக் காவலும், இன்று, உனக்கு யான் தரக் கோடி’ என்றான். |
‘வலக் கார்முகம் - வலிமை படைத்த வில்; என் கையது ஆக - என்கையின்கண் இருப்பதாக; அவ்வானுளோரும் - அந்தத் தேவர்களும்; விலக்கார் -என்னைத் துணிந்து தடுக்கமாட்டார்; அவர் வந்து விலக்கினும் - (ஒருவேளை) அவர் வந்து தடுத்தாலும்; என் கை வாளிக்கு- என் கையில் உள்ள அம்புக்கு; இலக்கா -குறியாகும்படி; எரிவித்து - (அவர்களை) எரியச் செய்து; உனக்கு -; உலகு ஏழினோடுஏழும் - பதினான்கு உலகங்களும்; மன்னர் குலக் காவலும் - அரசர் குலத்துக் காவல்தொழிலாகிய சக்கரவர்த்தியாம் தன்மையும்; இன்று - இப்பொழுதே; யான் தர- நான் கொடுக்க; கோடி’ - கொள்வாய்;’ என்றான்- கார்முகம் - வில். தசரதன் மன்னர் மன்னன் ஆதலின் ‘மன்னர் குலக் காவலும்’இராமனுக் குரியதாக்குவேன் என்றான் இலக்குவன். 124 |