இராமன் உரை  

1730.இளையான் இது கூற,
     இராமன், ‘இயைந்த நீதி
வளையாவரும் நல் நெறி நின்
     அறிவு ஆகும் அன்றே?
உளையா அறம் வற்றிட,
     ஊழ் வழுவுற்ற சீற்றம்,
விளையாத நிலத்து, உனக்கு
     எங்ஙன் விளைந்தது?’ என்றான்.

     இளையான் - இலக்குவன்; இது கூற - இதனைச் சொல்ல; இராமன்-;
‘இயைந்த நீதி வளையாவரும் நல்நெறி நின் அறிவு ஆகும் அன்றே?
-
அரசர்க்குப் பொருந்தியநீதிக்குச்  சிறிதும் மாறுபடாத நல்ல வழியிற்
செல்லுவது  நின் அறிவாகும் அல்லவா;  ஊழ் வழுவுற்ற  சீற்றம் -
முறைமைக்கு மாறாக உள்ள கோபம்;  விளையாத நிலத்து -உண்டாகாத
உன் மனத்தில்;  அறம் உளையா வற்றிட -  தருமம் மனம் வருந்திக்
கெடும்படி;  உனக்கு விளைந்தது  எங்ஙன்? - உனக்கு  உண்டாகியது
எவ்வாறு; ’என்றான்-.

     விளையாத நிலத்து - உண்டாகாத குடும்பத்தில் என்று பொருள்
உரைத்து,  ‘வாய்மையும் நீதிமுறைமையும் சிறிதும் தவறாத தயரத மன்னன்
வழிவில் வந்த உனக்கு எப்படி முறை தவறிய சீற்றம்விளைத்து’  என்று
கேட்டதாக  உரைப்பதும்  ஒரு பொருள் உண்டு.  இராமனது  பண்பு
நலத்துக்கு அவன்அவ்வாறு  கூறியதாகக்  கேட்டு பொருந்தாமையின்
அவ்வுரைசிறவாதாம்.                                         125