1732. | ‘நின்கண் பரிவு இல்லவர் நீள் வனத்து உன்னை நீக்க, புன்கண் பொறி யாக்கை பொறுத்து, உயிர் போற்றுகேனோ - என் கட்புலமுன் உனக்கு ஈந்துவைத்து, “இல்லை” என்ற வன்கண் புலம் தாங்கிய மன்னவன் காண்கொல்?’ என்றான். |
‘என் கண்புல முன் உனக்கு ஈந்து வைத்து - என் கண் எதிரே உனக்கு அரசைக்கொடுத்து; ‘இல்லை’ என்ற- பிறகு உனக்கு அரசு இல்லை என்று சொல்லிய; வன் கண் புலம்தாங்கிய மன்னவன் காண்கொல்?- கொடுந் தன்மை உடைய தயரதனோ யானும்; நின்கண்பரிவு இல்லவர்?- உன்னிடத்து அன்பு இல்லாதவர்கள்; நீள்வனத்து - நீண்டகாட்டில்; உன்னை நீக்க - உன்னை அனுப்ப (அதன் பிறகும்); புன்கண் கொறி யாக்கை பொறுத்து - பொலிவழிந்த ஐம்பொறிகளை உடைய உடம்பைச் சுமந்து; உயிர் போற்றுகேனோ?’ - உயிரைப் பாதுகாத்து (தயரதன் போல்) வாழ்வேனா;’ என்றான். - இராமனை வனம் அனுப்பித் தயரதன் உயிர் வாழ்வதாக நினைத்தவன் ஆதலின் நானும்அவ்வாறானவன் அல்லன் என்று இங்ஙனம் கூறினான் இலக்குவன். வன் - கொடிய, கண் புலம் -கண்ணாகிய புலம் எனினும் ஆம். 127 |