1816. | ‘திக்கு நோக்கிய தீவினைப் பயன்’ எனச் சிந்தை நெக்கு நோக்குவோர், ‘நல்வினைப் பயன்’ என நேர்வோர், பக்கம் நோக்கல் என்? பருவரல் இன்பம் என்று இரண்டும் ஒக்க நோக்கிய யோகரும், அருந் துயர் உழந்தார். |
பருவரல் இன்பம் என்று இரண்டும் - துன்பம், இன்பம் என்ற இரண்டையும்; ஒக்க நோக்கிய யோகரும் - சமமாகப் பார்க்கின்ற ஞான யோகிகளும்; அருந்துயர்உழந்தார் - அரிய துன்பத்தில் வருந்தினார் (என்றால்); ‘திக்கு நோக்கிய தீவினைப்பயன்’ எனச் சிந்தை நெக்கு நோக்குவோர் - தம் இடத்தை நோக்கி வந்த தீவினையின்பயன் இது என்று மனம் உடைந்து துன்புற்றுப் பார்ப்பவர்; ‘நல்வினைப் பயன்’ என நேர்வோர் - இது நல்வினையால் விளைந்த பயனாகும் என்று உடன்பட்டு மகிழ்வோராகிய; பக்கம் நோக்கல் என் உலக மக்களிடத்து - ஆராய்ந்து கூற என்ன உள்ளது? தீவினையில் துவண்டு நல்வினையில் மகிழும் உலகினர் பற்றிச் சொல்ல என்ன உள்ளது?என்றார். ஏனெனின் சமநிலை உடைய ஞானிகளே துயர் வடித்தனர் ஆகலின். 1762, 1763 ஆம்பாடல்களில் வசிட்டன் உணர்வு குறித்தமை இங்கு ஒப்பிட்டுணரத் தக்கது. 211 |