இராமன் ‘இருத்தி’ என்றதன் காரணம் கூறல் 1826. | ‘வல் அரக்கரின் மால் வரை போய் விழுந்து, அல் அரக்கின் உருக்கு அழல் காட்டு அதர்க் கல் அரக்கும் கடுமைய அல்லல - நின் சில் அரக்குண்ட சேவடிப் போது’ என்றான். |
(இராமன்) ‘நின் - (சீதையே!) உனது; சில் அரக்கு உண்ட - குளிர்ந்தசெம்பஞ்சுக் குழம்பு ஊட்டப்பெற்ற; சேவடிப் போது - சிவந்த அடிமலர்கள்; வல்அரக்கரின் - கொடிய அரக்கர் போலத் (தோன்றும்); மால் வரை - பெரியமலையில்; போய் விழுந்து - சென்று பரவி; அல்- இரவிலும்; அரக்கின் உருக்கு அழல் காட்டு அதர் - அரக்கினை உருக்கினாற்போல வெப்பத்தைச்செய்கின்ற காட்டு வழியில் உள்ள; கல் - கற்கள்; அரக்கும் -உராய்கின்ற; கடுமைய அல்ல’ - கடுமையுடையன அல்ல;’ என்றான் -. மலைவழி, காட்டுவழி, இரவிலும் வெப்பம் செய்யும் வழி, கூரிய கற்கள் உற்ற வழி எனவேவெப்பமான - கூர்ங்கற்கள் உராய்வதனால் ஏற்படும் வலியைத் தாங்கும் கடுமையுடைய பாதம் அல்ல உன் பாதம்; குளிர்ந்த செம்பஞ்சுக் குழம்பு ஊட்டிய மெல்லிய மலரனைய பாதம். அதனால்தான்.‘இருத்தி’ என்றேனே அன்றி உன்னைப் பிரிதல் வல்லமையால் சொன்னேன் என்று கருதாதேஎன்பது போல இராமன் கூறினான். 221 |