நகர மாந்தர் தொடர இராமன் தேரில் சேறல்  

கலிவிருத்தம்

1840.ஏவிய குரிசில்பின் யாவர் ஏகிலார்?
மா இயல் தானை அம் மன்னனை நீங்கலாத்
தேவியர் ஒழிந்தனர்; தெய்வ மா நகர்
ஓவியம் ஒழிந்தன, உயிர் இலாமையால்.

     ஏவியகுரிசில்பின் - (தந்தையால்) ஏவப்பெற்றுக் காடு செல்லும்
இராமனைத்தொடர்ந்து; ஏகிலார் - உடன்செல்லாதவர்கள்;
யாவர்?
-
எவர் (ஒருவரும் இல்லை);  மா இயல் தானையின்- பெருமை
பெற்ற சேனையை உடைய;  மன்னை - தசரதனை; நீங்கலா - விட்டுப்
பிரியாத;  தேவியர் -தேவிமார்கள்;  ஒழிந்தனர்- செல்லாது  நீங்கினர்;
தெய்வ மாநகர் ஓவியம் -அயோத்திநகர்ச்சித்திரங்கள்;  உயிர்
இலாமையால் -
உயிர் இல்லாத காரணத்தால்; ஒழிந்தன- இராமனுடன்
செல்லாமல் நகரத்தில் தங்கிவிட்டன;  (மற்ற அனைவரும்சென்றனர்.)

     தேவிமாரும்,  ஒவியமும் தவிர மற்ற அனைவரும்  இராமன் பின்
சென்றனர் எனச் சுருங்கச்சொல்லி இராமன் உடன் சென்ற  நகரமாந்தரை
விளங்க வைத்தார்.                                              1