1845.பரந்து மீண் அரும்பிய பசலை வானகம்,
அரந்தை இல் முனிவரன் அறைந்த சாபத்தால்,
நிரந்தரம் இமைப்பு இலா நெடுங் கண் ஈண்டிய
புரந்தரன் உரு எனப் பொலிந்தது எங்குமே.

     மீன் - நட்சத்திரங்கள்;  பரந்து  அரும்பிய - தோன்றி எங்கும்
பரவியுள்ள;  பசலை வானகம் - விளர்த்த ஆகாயம்;  எங்கும் -
எல்லாவிடத்தும்;  அரந்தை இல் - துன்பம் இல்லாத;  முனிவரன்
அறைந்த சாபத்தால்-
கோதமன் என்னும் முனிவன் கூறிய சாப
மொழியால்;  நிரந்தரம் - எப்பொழுதும்; இமைப்பு இலா நெடுங்கண் -
இமைத்தல் இல்லாத பெரிய கண்கள்;  ஈண்டிய -நெருங்கி அமைந்த; 
புரந்தரன் உரு என - இந்திரனது  உடம்பைப் போல;  பொலிந்தது-
விளங்கியது.

     இந்திரன் சாபம் பெற்ற  வரலாறு  அகலிகைப் படலத்துக் கூறப்
பெற்றது.  வானம் இந்திரன்உடம்பு;  விண்மீன்கள் இந்திரன் உடம்பில்
உள்ள கண்கள் என உவமை காண்க.  ‘ஏ’ஈற்றசை.                   6