கலிவிருத்தம்  

1859.‘தேவியும் இளவலும் தொடர, செல்வனைப்
பூ இயல் கானகம் புக உய்த்தேன் என்கோ?
கோவினை உடன் கொடு குறுகினேன் என்கோ?
யாவது கூறுகேன், இரும்பின் நெஞ்சினேன்?

     ‘தேவியும் இளவலும் தொடர - மனைவியாகிய சீதையும் தம்பியாகிய
இலக்குவனும்தொடர்ந்து வர;  செல்வனை - செல்வமகனாகிய இராமனை;
பூ இயல் கானகம் -மலர்கள் பொருந்திய காட்டிடத்தில்; புக உய்த்தேன்
என்கோ? -
செல்லும்படிவிட்டுவந்தேன் என்று சொல்வேனோ;
கோவினை - இராமனை;  உடன்கொடு - கூடஅழைத்துக்கொண்டு;
குறுகினேன் என்கோ? - நகரத்தை அணுகினேன் என்று சொல்வேனோ;
இரும்பின் நெஞ்சினேன் - இரும்பின் ஒத்து வலிய நெஞ்சுடைய யான்;
யாவது கூறுகேன் -யாது சொல்வேன்?’

     ‘பூவியல் கானகம்’ என்றது அதனையும் கடுமையாகக் கூறாமல்
மென்மையாகக் கூறல் வேண்டும்என்பதால்.                        20