1864. முடிவுற, இன்னன மொழிந்த பின்னரும்,
அடி உறத் தழுவினன், அழுங்கு பேர் அரா
இடி உறத் துவளுவது என்னும் இன்னலன்;
படி உறப் புரண்டனன்;  பலவும் பன்னினான்.

     முடிவு உற - தன் கருத்து  (இராமனை மீள அழைத்துச் சேறலே
என்பது) முடிவாகத்தெரியும்படி; இன்னன - இந்த வார்த்தைகளை;
மொழிந்த பின்னரும் - சொல்லியபிறகும்; இடி உற - இடி ஒலி கேட்டு;
அழுங்கு பேர் அரா - மனம் வருந்தும்பெரும்பாம்பு;  துவளுவது -
துடித்துச் சோர்கின்றது;  என்னும் - என்றுசொல்லத்தக்க;  இன்னலன் -
துன்பம்  உடையவனாய்;  அடி உறத் தழுவினன் -இராமனது கால்களை
நன்கு பற்றிக்கொண்டு;  பலவும் பன்னினான் - பலவார்த்தைகளையும்
திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு;  படிமிசைப் புரண்டனன் -
பூமியில் விழுந்து புரண்டான்.

     இராமன் திரும்பி வருபவனாகத் தோன்ற வில்லை யாதலின் சுமந்திரன்
வருத்தம்பெரிதாயிற்று.  பன்னுதல் - ஒன்றையே  திரும்பத் திரும்பச்
சொல்லுதல்.                                                 25