சுமந்திரன் இராமனிடம் விடைபெற்று இலக்குவனை வினாவல்  

1880.ஆறினன்போல் சிறிது
     அவலம், அவ் வழி,
வேறு இலா அன்பினான்,
     ‘விடை தந்தீக’ எனா
ஏறு சேவகன் - தொழுது,
     இளைய மைந்தனை,
‘கூறுவது யாது?’ என,
     இனைய கூறினான்;

     வேறு இலா அன்பினான்- (சிறிதும்) வேறுபடாத அன்புடையவனாகிய
சுமந்திரன்; அவ் வழி- அவ்விடத்து; அவலம் சிறிது ஆறினன் போல்-
துயரம் சிறிது தெளிந்தவன் ஆகி; (இராமனிடம்),  ‘விடை தந்தீக’ - விடை
கொடுத்தருளுக; எனா -என்று சொல்லி (விடை பெற்று); ஏறு சேவகன்
தொழுது -
வீரனாகிய இராமனை வணங்கி;  இளைய மைந்தனை -
இலக்குவனை; ‘கூறுவது  யாது - (அரண்மனை சென்று)  சொல்ல
வேண்டுவது  என்ன;’  என -  என்று கேட்க; இனைய - (பின்
வருவனவற்றை) இத்தகையசொற்களை; கூறினான் - அவன் சொன்னான்.

     இராமன், சீதை இருவர்பாலும் செய்தி அறிந்த சுமந்திரன்
இலக்குவனையும்  அதுபோல்வினாவினான்.                         41