1901. | இருந்த அந்தணனோடு எல்லாம் ஈண்றவன் தன்னை ஈனப் பெருந்த தவம் செய்த நங்கை, கணவனில் பிரிந்து, தெய்வ மருந்து இழந்தவரின் விம்மி, மணி பிரி அரவின் மாழ்கி, அருந் துணை இழந்த அன்றிற் பெடை என, அரற்றலுற்றான்; |
இருந்தஅந்தணனோடு - உந்தித் தாமரையில் இருந்த பிரமனோடு; எல்லாம்ஈன்றவன் தன்னை ஈன - சர்வலோகங்களையும்தந்தருளிய பரமாத்மாவைப் பெற்றெடுக்க; பெருந்தவம் செய்த நங்கை- பெரிய தவத்தைச்செய்த பெருமாட்டியாகிய கோசலை; கணவனில் பிரிந்து- தயரதனாகிய நாயகனைப் பிரிந்து;தெய்வமருந்து இழந்தவரின் - தேவாமிர்தத்தை இழந்தவர்களைப் போல; விம்மி-துடித்து; மணி பிரி அரவின் மாழ்கி- (தனக்குக் கண்ணாகிய) மாணிக்கத்தை இழந்தபாம்பைப் போல மயங்கி; அருந்துணை இழந்த - அரியஆண்பறவையாகிய துணையை இழந்த; அன்றில் பெடை என - அன்றிற்பெண்பறவை போல; அரற்றலுற்றாள் - புலம்பத்தொடங்கினாள். பரமனுக்கே தாய்தான்; என்றாலும், ‘கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்’என்றவகையில் கோசலை அவலம் கொடியது. கோசலையின் துயரத்தைப் பல உவமைகளால் விளக்கினார்.தேவர்க்கு நிலைபேறு தருவது அமுதம்; பேரரசி என்ற தகுதிப்பாடு தயரதனால் பெற்றவள் கோசலை.பாம்பு முதிர்ச்சிக் காலத்தில் மணியை உமிழ்ந்து வெளியே வைத்து இரைதேடும் - மணி இழந்தால் துடித்து உயிர் நீக்கும் என்பது இலக்கியங்களில் வரும் செய்தி ஆகும். அன்றில் இனைபிரியாதுவாழும் பறவை. இதனால் இவை கணவனை இழந்து துயர் அடையும் கோசலைக்கு உவமை ஆயின. 62 |