1907. | ‘வேள்விச் செல்வம் துய்த்திகொல்? மெய்ம்மைத்துணை இன்மை சூழ்வின் செல்வம் துய்த்திகொல்? தோலா மனு நூலின் வாழ்வின் செல்வம் துய்த்திகொல் மன்?’ என்றனள் - வானோர் கேள்விச் செல்வம் துய்க்க வயிற்று ஓர் கிளை தந்தாள். |
வானோர் - தேவர்கள்; கேள்விச் செல்வம் - இராமன் புகழ் கேட்டல்ஆகிய செல்வத்தை; துய்க்க - அனுபவிக்க; வயிற்று ஓர்கிளை தந்தாள் - தன்வயிற்றிலிருந்து ஒப்பற்ற புதல்வனைத் தந்தவளாகிய கோசலை (தயரதனை நோக்கி); ‘வேள்விச் செல்வம் துய்த்தி கொல்? - முன் செய்த வேள்களின் பயனை துய்த்திகொல் -அனுபவிக்சச் சென்றாயோ; மெய்ம்மை - சத்தியம் என்கிற; துணை இன்மை -தனக்குச் சமானம் இல்லாத; சூழ்வின் செல்வம் - ஒன்றை உறுதி யாகப் பற்றிய உன் ஆலோசனையின் பயனை; துய்த்திகொல் - அனுபவிக்கச் சென்றாயோ; தோலா -தோல்வி அடையாத; மனு நூலின் வாழ்வின் செல்வம் - மனு முறைப்படி அரச வாழ்வுநடத்தியதால் ஆகிய பயனை; துய்த்திகொல்’- அனுபவிக்கச் சென்றாயோ; என்றனள் - கேள்வி - கேட்டற்குரிய புகழ். ‘தீங்கவி செவிகள்ஆரத் தேவரும் பருகச் செய்தான்’ (32)என்ற கருத்து இங்கு நினையத் தக்கது. கிளை - உறவு கோசலைக்கு உறவாவது புதல்வன் என்பதே. வேள்வி, சத்தியம், செங்கோன்மை இவற்றைக் காத்தொழுகிய தசரதன் இவற்றின் பயனை அனுபவிக்கச் சென்றானோ என்றாள். ‘கொல்’ ஐயவினா. ‘மன்’ கழிவுப்பொருள்; அவன் இப்போது இல்லாமையின் கழிந்தது கழிந்தது என்னும் பொருளில் வந்தது.இடைச்சொல். 68 |