1910.அனம் கொள் அளக்கர் இரும் பரப்பில்,
     அண்டர் உலகில், அப்புறத்தில்
விளங்கும் மாதர், ‘கற்பினார்,
     இவரின் யாரோ!’ என, நின்றார்;
களங்கம் நீத்த மதி முகத்தார்;
     கான வெள்ளம் கால் கோப்ப,
துளங்கல் இல்லாத் தனிக்குன்றில்
     தொக்க மயிலின் சூழ்ந்து இருந்தார்.

     அளம்கொள் அளக்கர் இரும்பரப்பில் - உப்பளத்தைக் கொண்ட
கடலாற்சூழப்பெற்ற நிலவுலகில்; அண்டர் உலகில் -
தேவர்உலகில்;
அப்புறத்தில் - வேறு இடங்களில்; விளங்கும்மாதர் - கற்புடன்
விளங்குகின்ற  மாதர்கள்; ‘இவரின் கற்பினார்  யாரோ!என -
இவர்களைக்காட்டிலும் கற்பிற் சிறந்தவர் யார் உளரோ என்னும்படி; 
நின்றார் - (அத்தேவிமார்)நின்றார்கள்;களங்கம் நீத்த மதிமுகத்தார் -
களங்கம் இல்லாத மதிபோன்ற முகத்தைஉடையவர்களாய அத்தேவிமார்; 
கான வெள்ளம் கால் கோப்ப- காட்டு நீர்ப்பெருக்கு தன் அடியைச்
சூழ உள்ள; துளங்கல் இல்லாத் தனிக் குன்றில் - சிறிதும்அசைந்து
கொடுக்காத பெரிய மலையில்; தொக்க மயிலின்- சேர்ந்து இருந்த மயில்
கூட்டத்தைப்போல;  சூழ்ந்திருந்தார் -அவ் அரண்மனையில்
திரண்டிருந்தனர்.

     அடியில் நீர் சூழ மலையில் மயில் திரண்டது போல் என
உவமைக்காண்க. கண்ணீர் வெள்ளம்சூழ அரண்மனையில் தேவிமார்
எனஉவமைக் கேற்பக் கொள்ளலாம். இனி கான வெள்ளம் என்பதற்கு
அவரது அழகுரவோசையாகிய வெள்ளம் என்பாரும் உளர்; பொருந்துமேற்
கொள்க.                                                      71