காட்டில் விழித்த மக்கள் இராமனைக் காணாது சோர்தல் 1918. | வருந்தா வண்ணம் வருந்தினார் - மறந்தார் தம்மை - ‘வள்ளலும் ஆங்கு இருந்தான் என்றே இருந்தார்கள் எல்லாம் எழுந்தார்; அருள் இருக்கும் பெருந் தாமரைக் கண் கரு முகிலைப் பெயர்ந்தார், காணார்; பேதுற்றார்; ‘பொருந்தா நயனம் பொருந்தி, நமைப் பொன்றச் சூழ்ந்த’ எனப் புரண்டார். |
வருந்தாவண்ணம்வருந்தினார் - இதுவரை யாரும் வருந்தாத முறையில்வருந்தினவர்களும்; தம்மை மறந்தார் -தம்மையே மறந்தவர்களும் ஆகிய (இராமனுடன் காடுசென்ற) நகரமாந்தர்கள்; ‘வள்ளலும் ஆங்கு இருந்தான் என்றே இருந்தார்கள் எல்லாம் - இராமனும் அங்கே தான் இருக்கின்றான் என்று கருதி இருந்த எல்லோரும்; எழுந்தார்-புறப்பட்டு; பெயர்ந்தார் -இராமன் தங்கியிருந்த இடத்துக்குச் சென்று; அருள்இருக்கும் பெருந்தாமரைக்கண் ஒரு முகிலை -அருள் வீற்றிருக்கும் பெரிய தாமரை மலர்போன்ற கண்களை உடைய கரு முகில் வண்ணனாகிய இராமனை; காணார் - காணாது; பேதுற்றார் - மயக்கம் அடைந்து; ‘பொருந்தா நயனம் பொருந்தி -மூடாத கண்கள்மூடி; நமைப் பொன்றச் சூழ்ந்த - நம்மை அழியும்படி ஆலோசித்துச் செய்தன;’ என -என்று சொல்லி; புரண்டார்- தரையில் வீழ்ந்து புரளத் தொடங்கினார்கள். துக்கத்தால் இதுவரை மூடாத கண்கள் ‘இராமனுடன் இருக்கிறோம். இராமனுடனேயே காட்டிலும்இருக்கப் போகிறோம்’ என்னும் களிப்பினால் உறங்கிவிட்டுனர். அதுவே நமக்கு விபத்தாயிற்றுஎன்று வருந்தினர் நகரமாந்தர். அருள் குடியிருக்கும் கண்களை உடையான் அவன் என்று இவ்விடத்தில்கூறியது நகரமாந்தரை உறங்கச் செய்ததும் அவன் செய்த அருளே என்பதை உணர்த்தி நயம் செய்கிறது.அவதார நோக்கத்துக்கு இடையூறு ஆக நகரமாந்தர் தன்னுடன் வராமைப்பொருட்டும், பின்னர்த் தன்னைய பரத குணாநுபவங்களை நகர மாந்தர் அனுபவித்தற்கும் ஆக அவர்களை உறங்கச் செய்ததுஅருளாலே என அறிக. 79 |