1919.எட்டுத் திசையும் ஓடுவான்
     எழுவார் விழுவார் இடர்க் கடலுள்;
‘விட்டு நீத்தான் நமை ’ என்பார்;
     ‘வெய்ய, ஐயன் வினை’ என்பார்;
‘ஒட்டிப் படர்ந்த தண்டகம், இவ்
     உலகத்து உளது அன்றோ? உணர்வைச்
சுட்டுச் சோர்தல் பழுது அன்றோ?
     தொடர்ந்தும் தேரின் சுவடு’ என்பார்.

     எட்டுத்திசையும் ஓடுவான் எழுவார் - எண்திசைகளிலும்
ஓடுவதற்காக எழுந்திருப்பார்; விழுவார் இடர்க்கடலுள் - ஆற்றாமையால்
அது செய்யமாட்டாது துன்பக்கடலுள் விழுவார்; ‘நமை விட்டு நீத்தான்’
என்பார் -
நம்மை விட்டுவிட்டுப் பிரிந்துபோய்விட்டான் என்று கதறுவார்;
‘ஐயன் வினை வெய்ய’ என்பார் - இராமன் செய்தசெயல் கொடியது
என்பார்;  ஒட்டிப் படர்ந்த தண்டகம் - பொருந்திப் பரவியுள்ள
தண்டகவனம்;  இவ் உலகத்து உளது அன்றோ? - இந்த உலகத்தில்தான்
உள்ளது  அல்லவா, உணர்வைச் சுட்டுச் சேர்தல் பழுது அன்றோ? -
அறிவைப் பொசுக்கித் தளர்வது  குற்றம்அல்லவா;  தேரின் சுவடு
தொடர்தும்’ -
அவன் சென்ற தேரின் சக்கரம் அழுந்திய வடுவைத்
தொடர்ந்து  சென்று அடைவோம்;’ என்பார் -.

    துக்கத்தால் நகரமாந்தர் துடித்தபடி இதனால் விளங்கும்.          80