இராமன் எரி வளர்த்து வழிபட்டு முனிவர் விருந்து ஏற்றல்  

1951.துறை நறும் புனல் ஆடி, கருதியோர்
உறையுள் எய்தி, உணர்வுடையோர் உணர்
இறைவற் கைதொழுது, ஏந்து எரி ஓம்பி, பின்
அறிஞர் காதற்கு அமை விருந்து ஆயினான்.

     (இராமன்) துறை நறும் புனல் ஆடி - கங்கைத் துறையில் மணம்
வீசும் நீரில்குளித்து; கருதியோர் உறையுள் எய்தி - வேத முனிவரர்
தவச்சாலையை அடைந்து; உணர்வுடையோர் உணர் - ஞானிகளால்
உணரப்படுகின்ற;  இறைவனைக் கை தொழுது -பரம்பொருளைக் கை
கூப்பி வணங்கி; ஏந்து எரி ஓம்பி - உயர்ந்துள்ள யாகாக்கினியைவழிபட்டு;
பின் - பிறகு; அறிஞர் - ஞானியராய முனிவரது; காதற்கு -அன்பினுக்கு;
அமை விருந்து ஆயினான் - பொருந்திய விருந்தினனாக ஆனான்-.

     இராமனும் பரம்பொருளை வழிபட்டான் என்பது நான்
எடுத்துக்கொண்ட அவதாரத்துக்கு ஏற்ப, தன்னை மனிதனாகவே கருதிப்
பரம்பொருளை வழிபட்டான் என்க.                               26