குகன் இராம இலக்குவரை நோக்கி இரவு முழுதும் கண்ணீர் சோர நிற்றல்  

1975. தும்பியின் குழாத்தின் சுற்றும்
     சுற்றத்தன், தொடுத்த வில்லன்,
வெம்பி வெந்து அழியாநின்ற
     நெஞ்சினன், விழித்த கண்ணன்
தம்பி நின்றானை நோக்கி,
     தலைமகன் தன்மை நோக்கி,
அம்பியின் தலைவன் கண்ணீர்
     அருவி சோர் குன்றின் நின்றான்.

     அம்பியின்தலைவன் - நாவாய்களுக்குத் தலைவனான குகன்;
தும்பியின்சூழாத்தில் சுற்றும் சுற்றத்தன் -யானைக் கூட்டத்தைப்
போலச் சுற்றியிருக்கும் வேட்டுவக்கூட்டத்தை உடையனாய்;  தொடுத்த
வில்லன் -
நாண் ஏற்றி அம்பு பொருத்திய தயார்நிலையில் உள்ள வில்லை
உடையனாய்; வெம்பி வெந்து அழியா நின்ற நெஞ்சினன்-(இராமன்
வனம் புகுந்த நிலை கருதி) புழுங்கி நொந்து நைந்த மனத்தனாகி;  விழித்த
கண்ணன்-
இரவு முழுதும் விழித்த கண்ணனாய்;
தம்பிநின்றானை
நோக்கி -
நின்றுகொண்டே உறங்காது காவல் செய்யும்இலக்குவனைப்
பார்த்து;  தலைமகன் தன்மை நோக்கி -அரச குமாரனாகிய இராமன்
தரையில்உறங்கும் தன்மையைப் பார்த்து;  கண்ணீர் அருவிசோர்
குன்றின் -
கண்ணீராகிய அருவிவிழும் மலைபோல;நின்றான் -.

     இதற்கு இலக்குவனைச் சந்தேகித்துக் குகனும் குகனை ஐயுற்று அவனது
சுற்றமும் கண்ணுறங்காது காவல் செய்ததாகப் பொருள் உரைத்து நயர்
காண்பாருளர் ஆயினும், குகனாகிய தலைவனையே ஐயுற்று அவனையும்
சேர அழிக்கத் தயாராக அவனது சுற்றமாகிய சேனை இருந்ததாகக் கூறல்
குகனது நாயகத் தன்மைக்குப் பேரிழப்பாக முடியும். அன்றியும் குகனையே
இராமன்பால் அறிமுகப்படுத்தியவன் இலக்குவன் என்பது குகனும்
அறிந்ததே. குகனது வேண்டுகோளை ஏற்கும் இராமன் சீதையை நோக்கித்
தம்பி திருமுகம் நோக்கியதை’ ஆண்டிருந்த குகனும் அறியாதிரானன்றே?
திருநகர் தீர்ந்த வண்ணத்தைப் பருவரல் தம்பி கூறக் கேட்டான் அன்றே?
அவ்வாறு பல்வேறமயங்களில் இலக்குவனது தொண்டுள்ளமும், அன்பும்
நன்கு காணக்கிடைத்த குகன் இலக்குவனை ஐயுற்றான் எனல் சற்றும்
பொருந்தாது என்க. கங்கை காண் படலத்தே பரதன்பால் இலக்குவனைப்
பற்றிச் சொல்ல நேரும்பொழுது அழகனும் அவளும் துஞ்ச, வில்லை
ஊன்றிய கையோடும் வெய்துயிர்ப் போடும்... கண்கள் நீர்பொழிய...
நின்றான்.... இமைப்பிலன் நயனம்’ (2344) என்று சொல்வான் எனில்,
முன்னர் அவ்வாறு அவனை உணர்ந்ததனால் அன்றோ பின்னர் அவ்வாறு
கூறமுடிந்தது! எனவே, இலக்குவன் இராமன் பாற்கொண்ட அன்பின்
செறிவையும், இலக்குவனது தொண்டுள்ளத்தையும் அறிந்த குகன்
இலக்குவனை ஐயுற்று வில்லும் அம்புமாய்த் தான் காவல் செய்தான் எனல்
சிறிதும் பொருந்தாமையும், குகனுக்குப் பெருமையாகாமையும் அறிக.
அன்றியும் ‘தம்பி நின்றானை நோக்கி....கண்ணீர் அருவி சோர்குன்றின்
நின்றான்’ எனச் சொல்லப்படுவதிலிருந்தே அரசகுமாரர்கள் இவ்வாறு
இருக்கலாம்படி ஆயிற்றே என்கிற அவலமே குகன்பால் மேலோங்கி
நின்றமையைச் கம்பர் புலப்படுத்தினார் ஆதல் காண்க.                23