1982.‘தோல் உள, துகில்போலும்;
     சுவை உள; தொடர் மஞ்சம்
போல் உள பரண்; வைகும்
     புரை உள; கடிது ஓடும்
கால் உள; சிலை பூணும்
     கை உள; கலி வானின் -
மேல் உள பொருளேனும்,
     விரைவொடு கொணர்வேமால்;

     ‘துகில் போலும் தோல் உள - நூல் ஆடை போல உள்ள
மென்மையான தோல்கள் உள்ளன;சுவை உள - சுவையுடைய இனிய
பொருள்கள் பல உள்ளன; தொடர் மஞ்சம் போல் -தூங்குதற்குக்
கயிற்றால் பிணித்த தொட்டிற் கட்டில் போல்;  பரண் உள - பரண்கள்
உள்ளன; வைகும் புரை உள - தங்குதற்குக் குடில்கள் உள்ளன;  கடிது
ஓடும் கால் உள -
விரைந்து  சென்று எதையும் கொணர்ந்து  தரவல்ல
வலிய கால்கள் எமக்கு  உள்ளன;  சிலை பூணும்கை உள - தடுப்பாரை
அழிக்க வல்ல வில்லை ஏந்திய கைகள் எம்மிடம் உள்ளன;  கலிவானின்
மேல் உள பொருளேனும் விரைவொடு கொணர்வேம்’ -
செருக்கிய
ஆகாயத்தின் மேலேஉள்ள பொருளாக இருந்தாலும் விரைந்து சென்று
கொண்டு வருவோம்.’

     ‘பட்டு நீக்கித் துகில் உடுத்தும்’ என்னும் பட்டினப்பாலையுள்(107)
மெல்லிய நூலாடையைத் துகில் எனலின் இங்கும் அவ்வாறே கொள்க.
விரைந்து பணி செய்யவும்துன்புறுத்துவாரை அழிக்கவும் வலிய காலும்,
கையும் இருத்தலின் நீங்கள் நிம்மதியாக இங்கேதங்கலாம் என்றான் குகன்.
அகண்டாகாரமாக விரிந்து ஏனைய நிலம், நீர், தீ, காற்று என்னும்
நான்கினையும் தன்னுள்ளே அடக்கிக்கோடலின் ‘செருக்கிய ஆகாயம்’ எனப்
பொருள் உரைத்தாம்.‘கலி’ என்பது ‘ஓசை’ என்று பொருள் கூறி, ஓசையைத்
தன் குணமாக உடைய ஆகாயம் எனலும் ஒன்று.‘ஆல்’ அசை.        30