குகன் நாவாய் கொணர, மூவரும் கங்கையைக் கடத்தல் 1985. | சிந்தனை உணர்கிற்பான் சென்றனன், விரைவோடும்; தந்தனன் நெடு நாவாய்; தாமரை நயனத்தான் அந்தணர்தமை எல்லாம், ‘அருளுதிர் விடை’ என்னா, இந்துவின் நுதலாளோடு இளவலொடு இனிது ஏறா. |
(குகன்) சிந்தனை உணர்கிற்பான் விரைவோடும் சென்றான் - (இராமனது)மனக்கருத்தை உணர்ந்தவனாய் விரைந்து சென்று; நெடுநாவாய் தந்தனன்- பெரியமரக்கலங்களைக் கொணர்ந்தான்; தாமரை நயனத்தான்- தாமரை மலர்போலும் கண்களைஉடைய இராமன்; அந்தணர் தமை எல்லாம் - முனிவர்கள் எல்லாரையும்; ‘விடைஅருளுதிர்’ என்னா - ‘எனக்குப் புறப்பட விடை கொடுங்கள்’ என்று கேட்டுப் பெற்று; இந்துவின் நுதலாளோடு - பிறைமதி போலும் நெற்றியை உடைய சீதையோடும்; இளவலொடு -இலக்குவனோடும்; இனிது ஏறா - இனிமையாக அந்நாவாயில் ஏறி, சென்றனன் முற்றெச்சம். வடிவில் முற்றுவினையாய் எச்சப்பொருள் தரும் இத்தகையன முன்னும்உள; பின்னும் வரும். பொருள் நோக்கி இலக்கணம் உணர்க. 33 |