1987.பால் உடை மொழியாளும்,
     பகலவன் அனையானும்,
சேலுடை நெடு நல் நீர்
     சிந்தினர், விளையாட;
தோலுடை நிமிர் கோலின்
     துழவிட, எழு நாவாய்,
காலுடை நெடு ஞெண்டின்,
     சென்றது கடிது அம்மா!

     பால் உடை மொழியாளும் - பால்போலும் இன்சொல்
உடையவளாகிய சீதையும்;  பகலவன் அனையானும் - சூரியனை ஒத்த
இராமனும்; சேல் உடை நெடு நல் நீர் சிந்தினர்விளையாட - கயல்
மீன்களை உடைய நீண்ட புண்ணியக் கங்கை நீரைச் சிதறி எறிந்து
விளையாடிக் கொண்டே செல்ல; தோல் உடை நிமிர் கோலின் துளவிட-
முன்னர்த் தோல்பட்டையை உடைய நீரைத் தள்ளி மேல் உயரும்
துடுப்புகளால் நீரைத் தள்ள;  எழு நாவாய் -செல்லுகின்ற தோணி;
காலுடை நெடு ஞெண்டின் - கால்களை உடைய பெரிய நண்டைப் போல;
கடிது  சென்றது - விரைந்து  சென்றது.

     படகிற் செல்வார் நீர் சிதறி விளையாடல் இயல்பு.  துடுப்புகளின்
முனையில் இறக்கைகள்போல் தோலைத் தைத்திருப்பர், நீரைத்
தள்ளுவதற்கு வசதியாக. துடுப்புகள் கால்களாகவும்நாவாய் நண்டாகவும்
காண்க. நண்டு செல்லுங்கால் பக்கங்களில் ஒதுங்கி ஒதுங்கிச் செல்லும்.
அத்தன்மை நாவாயின் செலவுக்கு ஒப்பாகும் என்க. ‘அம்மா’
வியப்பிடைச்சொல்.                                             35