1995. ‘துன்பு உளதுஎனின் அன்றோ
     சுகம் உளது? அது அன்றிப்
பின்பு உளது; “இடை, மன்னும்
     பிரிவு உளது” என, உன்னேல்;
முன்பு உளெம், ஒரு நால்வேம்;
     முடிவு உளது என உன்னா
அன்பு உள, இனி, நாம் ஓர்
     ஐவர்கள் உளர் ஆனோம்;

     ‘துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது? - துன்பம்
உளதானால் அல்லவா சுகம்உண்டாகும்; அது அன்றிப் பின்பு உளது -
அச்சுகம் இப்பிரிவாகிய துன்பத்துக்குப் பின்புஉறுதியாக உளது; ‘இடை
மன்னும் பிரிவு உளது’ என உன்னேல் -
இடையே இப்படி நிலையான
ஒருபிரிவு உண்டாகியுள்ளது என்று மனத்தில் கருதாதே;  ஒரு நால்வேம்
முன்பு உளெம்
- இராமஇலக்குவ பரத சத்துருக்கனன் என்று ஒரு நான்கு
சகோதரர்கள் முன்பிருந்தோம்; முடிவு உளது எனஉன்னா அன்பு உள
நாம் -
கடைபோயிற்று என்று கருதமுடியாது வளர்ந்து கொண்டே செல்லும்
அன்பினை மிகவும் உடைய நாம்; இனி ஓர் ஐவர்கள் உளரானோம் -
இனிமேல் (உன்னோடு) ஐந்து சகோதரர்கள் ஆக; ஆனோம்-.

     தன்னோடும் தம்பியோடும் சீதையோடும் குகனைப் பணித்ததோடன்றிப்
பரதசத்துருக்கனர்களோடும் குகனைப் பணித்த தோழமை அறிந்து
இன்புறத்தக்கது.  துன்பத்திற்குப்பின்னர் இன்பம்;  இப்பிரிவின் பின் ஓர்
இன்பம் உண்டு ஆதலின் அவ் இன்பத்தைத் தருவதாகஇதனை நினைய
வேண்டுமே அன்றித் துன்பமாக நினைத்தல் ஆகாது என்றானாம் -
அன்பிற்கு முடிவுஇல்லை. அது மேலும்  வளர்ந்து  கொண்டே போகும்;
எனவே, இச் சகோதரத்துவத்துக்கும் முடிவில்லைஎன்றானாம். ‘ஓர்’ உரை
அசை.                                                       43