குகன் விடைபெற்றுச் செல்ல மூவரும் வனத்துள் மேலும் செல்லல் 1998. | பணி மொழி கடவாதான், பருவரல் இகவாதான், பிணி உடையவன் என்னும் பிரிவினன், விடைகொண்டான்; அணி இழை மயிலோடும் ஐயனும் இளையோனும் திணி மரம், நிறை கானில் சேணுறு நெறி சென்றார். |
பணி மொழி கடவாதான் - இராமன் இட்ட கட்டளை வார்த்தையை மீறாது; பருவரல்இகவாதான் - இராமனது பிரிவினால் ஏற்பட்ட துன்பமும் நீங்காது; பிணி உடையவன்என்னும் பிரிவினன் - நோயுற்றான் என்று சொல்லும்படியான பிரிவுத் துன்பத்தை உடையனாய்;விடை கொண்டான்- (குகன்) உத்தரவு பெற்றுச் சென்றான்; அணி இழை மயிலோடும்ஐயனும் இளையோனும்- அழகிய ஆபரணங்களை அணிந்த மயில் போல்பவளாகிய சீதையோடும்இராமனும் தம்பி இலக்குவனும்; திணி மரம் நிறை கானில்- வலிய பெரு மரங்கள்நிறைந்துள்ள காட்டில்; சேண் உறு நெறி - நெடுந் தொலையான வழியில்; சென்றார்- சென்றார்கள். இராமன் ஆணையை மீறாமல் துன்பத்தைத் தாங்கிக் குகன்செல்ல, மூவரும் காட்டில் நெடுந்தொலை சென்றனர். காட்டின் உள்ளே செல்லச் செல்லப்பெருமரங்கள் செறிந்திருக்கும் ஆதலின் ‘திணி மரம் நிறை கானில்’ எனவே, காட்டின் உள்பகுதியில் செல்வாராயினர் என்பது அறியப்படும். 46 |