2004.‘நெய்ஞ் ஞிறை நெடு வேலின்
     நிறம் உறு திறம் முற்றிக்
கைஞ் ஞிறை நிமிர், கண்ணாய்! -
     கருதின இனம் என்றே
மெய்ஞ் ஞிறை விரி சாயல்
     கண்டு, நின் விழி கண்டு,
 மஞ்ஞையும் மட மானும்
     வருவன பல - காணாய்!

     நெய்ஞ்ஞிறை நெடு வேலின் நிறம் உறுதிறம் முற்றி - நெய்
பூசப்பெற்று நிரம்பியநீண்ட வேற்படையின் தன்மை நிரம்பிய ஆற்றல்
பொருந்தி;  கைஞ் ஞிறை நிமிர் கண்ணாய்!- கை அளவில் அடங்காது
மேற்பட்டுச் செல்கின்ற கண்ணை உடையவளே!; மஞ்ஞையும் மடமானும்-
மயிலும் இளைய மானும்;  மெய்ஞ் ஞிறை விரிசாயல் கண்டும் - உன்
மேனியில் நிரம்பியுள்ள விரிந்த மென்மைத் தன்மையைப் பார்த்தும்;  நின்
விழி கண்டும்-
உன் கண்களைப் பார்த்தும்; இனம் என்று கருதின -
உன்னைத் தம் இனம் என்றுகருதினவாய்;  வருவன பல - வருகின்றன
வாகிய பலவற்றை;  காணாய் -.

     நிறை - ஞிறை. போலி; தம் சாயல் சீதையிடம் இருத்தலால் மயில்கள்
இனம் என்றுவந்தன. விழியைக் கண்டு தன் இனமான மான் என்று கருதி
மான்கள் வந்தன.  நிறம் உறு திறம் -மார்பை ஊடுருவிச் செல்லும்
பேராற்றல் எனலும் ஆம். இங்கு ஆடவர்தம் நெஞ்சத்தை ஊடுருவிச்
செல்லும் ஆற்றலாம்.  என்றே -ஏகாரம் தேற்றம்.                     6