2024.‘ “ துப்பு உறழ் துவர் வாயின்
     தூய் மொழி மயிலோடும்
அப்பு உறு கடல் ஞாலம்
     ஆளுதி கடிது” என்னா,
ஒப்பு அறும் மகன் உன்னை,
     “உயர் வனம் உற ஏகு” என்று,
எப் பரிசு உயிர் உய்ந்தான்
     என் துணையவன்? என்றான்.

     ‘என் துணையவன் - என் நண்பனாகிய தயரதன்; ஒப்பு அறும்
மகன்
உன்னை- உவமை சொல்ல முடியாத மகனாகிய உன்னை;  துப்பு
உறழ் துவர் வாயின் தூய்மொழிமயிலோடும் -
பவளத்தை ஒத்த
செந்நிறமான வாயினை உடைய தூய மொழிகளைப் பேசும் மயிலனைய
சாயலை உடைய சீதையோடும்;  அப்பு உறு கடல் ஞாலம்  - நீர்
பொருந்திய கடலாற் சூழப்பெற்ற உலகத்தை;  கடிது ஆளுதி - விரைவாக
ஆள்வாயாக;  என்னா - என்று கூறி; ‘உயர் வனம் உற ஏகு’ என்று -
(உடனே) மரங்கள் உயர்ந்துள்ள காட்டுக்குச் சேரச்செல்என்று கூறி;  எப்
பரிசு -
எவ்வாறு;  உயிர் உய்ந்தான் - உயிருடன் வாழ்பவன்ஆனான்;’
என்றான்-.

     நாளையே பட்டாபிஷேகம் என்று கூறி, உடனே ‘கான் ஏகு’ என்றதை
நினைத்து இவ்வாறுகூறப்பட்டது.  இவ்வாறு  உன்னை வனம் அனுப்பிய
பிறகும் தயரதனால் எவ்வாறு உயிர் வாழமுடிந்தது?  என்றானாம் -
தயரதன் இறந்த செய்தி இராமன் அறியாததாதலின் பரத்துவாசன் அதனை
அறிந்திலன் ஆயினும் தன்துணையவனைப் பற்றிய பரத்துவாசனது
அனுமானம் பொய்யாகாமை ‘எப் பரிசுஉயிர் உய்ந்தான்’ என்னும் கூற்றில்
புலனாதல்காண்க.                                             26