2047.‘வாளும் வேலும் விட்டு அளாயின
     அனைய கண் மயிலே!
தாளின் ஏலமும் தமாலமும்
     தொடர்தரு சாரல்,
நீள மாலைய துயில்வன
     நீர் உண்ட கமஞ் சூல்
காளமேகமும் நாகமும்
     தெரிகில - காணாய்!

     வாளும் வேலும் விட்டு அளாயின அனைய கண் மயிலே! -
வாளையும் வேலையும் ஒன்றுசேர்த்து ஒன்றனுள் ஒன்றைக் கலந்து
வைத்தாற் போன்ற கண்களை உடைய மயில் போன்ற சாயலை
உடையவளே!’ தாளின் - அடிப் பகுதியில்; ஏலமும் தமாலமும்
தொடர்தரு சாரல் -
ஏலக் கொடியும் மனம் உள்ள பச்சிலைக் கொடியும்
பற்றிக் கிடக்கின்ற மலைப் பக்கத்தே;  நீள மாலைய - நீண்ட இயல்பினை
உடையவாய்; துயில்வன - உறங்குகின்றனவாகிய; நீர் உண்ட கமம் சூல்-
நீரை உண்ட நிறைந்த கருப்பத்தை உடைய;  காள மேகமும் -கரிய
மேகமும்; நாகமும் - யானைகளும்; தெரிகில - வேற்றுமை உணரமுடியாது
ஒன்றுபோலவே உள்ளன; காணாய் - இவற்றைப் பார்ப்பாயாக.

     மலைச்சாரலில் படிந்துள்ள நீருண்ட கரிய மேகங்களும், அங்கே
உறங்கும் யானைகளும் வேற்றுமை தெரியா வண்ணம் கிடக்கின்ற
வியப்பினைச் சீதைக்குக் காட்டிக்கூறினான் இராமன்.  அளாயின - கலந்த.
‘அளவளாவுதல்’ என்னும் வழக்கும் இப்பொருளினதே. ஏலம்,தமாலம் கொடி
வகைகள்.                                                     2