2025. | ‘நீண்ட மால் வரை மதி உற, நெடு முடி நிவந்த தூண்டு மா மணிச் சுடர் சடைக் கற்றையின் தோன்ற, மாண்ட வால் நிற அருவி அம் மழ விடைப் பாகன் காண் தகும் சடைக் கங்கையை நிகர்ப்பன - காணாய்!1 |
நீண்டமால் வரை - மிக உயர்ந்த பெரிய மலையிலே; மதிஉற - சந்திரன் வந்து பொருந்த; நிவந்த நெடுமுடி- மிக உயர்ந்த அம் மலை உச்சியிலே; தூண்டும் மாமணிச் சுடர் -தூண்டி எரியவிடப்பட்டது போலப் பிரகாசிக்கின்ற பெரிய மணிக் கற்களின் ஒளியானது; சடைக் கற்றையின்தோன்ற - சிவபிரானது சடைத் தொகுதியைப் போல விளங்க; மாண்ட வால் நிற அருவி -(அம் மலை உச்சியிலிருந்து விழும்) மாட்சிமை பொருந்திய வெண்ணிறம் படைத்த அருவியானது; அம் மழவிடைப் பாகன் - அந்த இளமையான இடபத்தை ஏறிச் செலுத்துபவன் ஆகிய சிவபிரானது;காண்தகும்- அழகு பொருந்திய; சடைக்கங்கையை- சடை முடியில் உள்ளகங்கையை; நிகர்ப்பன- ஒத்திருப்பனவற்றை; காணாய் - பார்ப்பாயாக. மலை சிவபிரான். மதி பொருந்தல் சிவபிரான் பிறை சூடியது போலத் தோன்றல்.செம்மணிச்சுடர் - செஞ்சடைக்கற்றை. வால்நிற அருவி - சடையில் உள்ள கங்கை என உவமைகாண்க. 7 |