2054. ‘இழைந்த நூல் இணை மணிக் குடம்
     சுமக்கின்றது என்னக்
குழைந்த நுண் இடைக் குவி இள
     வன முலைக் கொம்பே!
தழைந்த சந்தனச் சோலை தன்
     செலவினைத் தடுப்ப,
நுழைந்து போகின்றது ஒக்கின்ற
     மதியினை நோக்காய்!

     இழைந்த நூல் - ஓர் இழையாக அமைந்த நூலானது; இணைமணிக்
குடம் சுமக்கின்றதுஎன்ன -
இரண்டு மணிக்கற்கள் அழுத்திய குடத்தைச்
சுமக்கின்றது  என்று சொல்லுமாறு; குழைந்த - ஒல்கித் தளருகின்ற;  நுண்
இடை -
நுண்ணிய இடையையும்;  குவி இள வனமுலைக் கொம்பே! -
திரண்ட இளமையான அழகிய தனங்களையும் உடைய பூங்கொம்பு
போன்றவளே!;தழைந்த சந்தனச் சோலை - தழைத்து மிகுந்துள்ள
சந்தனமரச் சோலையானது;  தன்செலவினைத் தடுப்ப - (மதியாகிய)
தன்னுடைய வானத்திற் செல்லும் செலவினைத் தடுத்தலான்; நுழைந்து
போகின்றது  ஒக்கின்ற -
அந்தச் சோலைக்குள் புகுந்து போவதை
ஒத்திருக்கின்ற;  மதியினை - சந்திரனை;  நோக்காய் - பார்ப்பாயாக.

     காம்புடைய நகில்கள் உச்சியில் நீலமணி அழுத்திய குடம்
போன்றனவாதலின் ‘மணிக்குடம்’என்றார். வானத்திற் செல்லும் சந்திரன்
அடர்த்தியாகவுள்ள சந்தனச் சோைாலயில் உள்புகுந்துசெல்வதைப்
போன்றுள்ளது என்றது தற்குறிப்பேற்றவணியாம். தழைத்த என்பது தழைந்த
எனமெலிந்தது.                                                9