2054. | ‘இழைந்த நூல் இணை மணிக் குடம் சுமக்கின்றது என்னக் குழைந்த நுண் இடைக் குவி இள வன முலைக் கொம்பே! தழைந்த சந்தனச் சோலை தன் செலவினைத் தடுப்ப, நுழைந்து போகின்றது ஒக்கின்ற மதியினை நோக்காய்! |
இழைந்த நூல் - ஓர் இழையாக அமைந்த நூலானது; இணைமணிக் குடம் சுமக்கின்றதுஎன்ன - இரண்டு மணிக்கற்கள் அழுத்திய குடத்தைச் சுமக்கின்றது என்று சொல்லுமாறு; குழைந்த - ஒல்கித் தளருகின்ற; நுண் இடை - நுண்ணிய இடையையும்; குவி இள வனமுலைக் கொம்பே! - திரண்ட இளமையான அழகிய தனங்களையும் உடைய பூங்கொம்பு போன்றவளே!;தழைந்த சந்தனச் சோலை - தழைத்து மிகுந்துள்ள சந்தனமரச் சோலையானது; தன்செலவினைத் தடுப்ப - (மதியாகிய) தன்னுடைய வானத்திற் செல்லும் செலவினைத் தடுத்தலான்; நுழைந்து போகின்றது ஒக்கின்ற - அந்தச் சோலைக்குள் புகுந்து போவதை ஒத்திருக்கின்ற; மதியினை - சந்திரனை; நோக்காய் - பார்ப்பாயாக. காம்புடைய நகில்கள் உச்சியில் நீலமணி அழுத்திய குடம் போன்றனவாதலின் ‘மணிக்குடம்’என்றார். வானத்திற் செல்லும் சந்திரன் அடர்த்தியாகவுள்ள சந்தனச் சோைாலயில் உள்புகுந்துசெல்வதைப் போன்றுள்ளது என்றது தற்குறிப்பேற்றவணியாம். தழைத்த என்பது தழைந்த எனமெலிந்தது. 9 |