2057. | ‘ஆடுகின்ற மா மயிலினும் அழகிய குயிலே! கூடுகின்றிலர், கொடிச்சியர் தம் மனம் கொதிப்ப ஊடுகின்றனர், கொழுநரை உருகினர் நோக்கப் பாடுகின்றன, கின்னர மிதுனங்கள் - பாராய்! |
ஆடுகின்ற மா மயிலினம் அழகிய குயிலே! - (கார் கண்டு களிப்புற்றுத் தோகைவிரித்து) ஆடுகின்ற சிறந்த மயிலைக்காட்டிலும் (சாயலால்) அழகுடைய குயில்போலும் குரல்உடையவளே!; கொடிச் சியர்- குற மகளிர்; தம்மனம் கொதிப்ப ஊடுகின்றனர் -தம் மனம் கொதிக்கின்றபடியால் (கணவர் மேல்) ஊடல் கொண்டவராய்; கூடுகின்றிலர் -(கணவரைக்) கூடாமல் இருக்கின்ற அவர்; கொழுநரை - தம் கணவரை; உருகினர் -(தாமே) அன்பினால் உருகியவர்களாய்க் (கூடுதற்குறிப்பினால்); நோக்க -பார்க்கும்படி; கின்னர மிதுனங்கள் - ஆணும் பெண்ணுமாய் இணைந்திருக்கும் கின்னரமிதுனங்கள்; பாடுகின்றன-; பாராய்-. ஊடலாற் பிரிந்த குறத்தியரைக் கணவர்பால் தம் பாடலாற் கின்னர மிதுனங்கள் சேர்த்துவைப்பனவாயின என்பது கருத்து. கின்னர மிதுனம் - மனித முகமும் குதிரை உடலும் புடைத்து ஆனும்பெண்ணுமாய் இணைந்தே இருந்து கின்னரம் என்னும் இசைக்கருவி கொண்டு பாடும் தன்மை உள்ள தேவசாதியினர். 12 |