இராமன் முதலிய மூவரும் மாலை வழிபாடு செய்தல்  

2087. மொய் உறு நறு மலர் முகிழ்த்தவாம் சில;
மை அரு நறு மலர் மலர்ந்தவாம் சில;
ஐயனோடு, இளவற்கும் அமுதனாளுக்கும்
கைகளும், கண்களும், கமலம் போன்றவே.

     மொய்உறு நறு மலர் சில முகிழ்த்தவாம்- (மாலையில்) நெருங்கிப்
பொருந்தியமணமுள்ள மலர்கள் சில குவிந்தன; மை அறு நறுமலர் சில
மலர்ந்தவாம்-
குற்றமற்றமணமுள்ள மலர்கள் சில மலர்ந்தன; ஐயனோடு-
இராமனோடு;  இளவற்கும் - இலக்குவனுக்கும்;
அமுதனாளுக்கும்-
அமுதத்தை ஒத்த சீதைக்கும்; கைகளும் கண்களும் கமலம்போன்ற-
கைகளும், கண்களும் மாலைக் காலத்துத் தாமரைகள் குவிந்திருப்பது 
போல்குவிந்து  மூடிக்கொண்டன.

     மாலையிற் சில மலர் குவிதலும், வேறுசில மலர்தலும் இயல்பு -
வழிபாடு செய்வார் கண்களைமூடிக் கைகளைக் குவிப்பர் ஆதலின், இங்கு
மாலைக்காலத்துத் தாமரை குவிந்திரப்பது  போலக்கைகளும், கண்களும்
ஆயின என்று குறிப்பால் அதனைப் புலப்படுத்தினர்.  ஏகாரம் ஈற்றசை.  42