இலக்குவனுக்கு இராமன் ஆறுதல் கூறல்  

2099.‘ஆக, செய்தக்கது இல்லை’ அறத்தினின்று
ஏகல் என்பது அரிது’ என்றும் எண்ணினான்
ஓகை கொண்டவன் உள் இடர் நோக்கினான்
‘சோக பங்கம் துடைப்பு அரிதால்’ எனா,

     ஆக - அப்படியே இருக்கட்டும்; செய்தக்கது இல்லை -
(துன்பத்துக்குப்பரிகாரமாகச்) செய்யக்கூடியது எதுவும் இல்லை;
அறத்தினின்று ஏகல் என்பது அரிது -தருமத்திலிருந்து விலகிச்
செல்வது  என்பது  நம் போன்றார்க்கு இயலாது;  என்று எண்ணினான்-
என்று தன் மனத்தில் (இராமன்) கருதினான்;  ஓகை கொண்டவன் -
(தனக்குத்தொண்டு செய்தலில்) மகிழ்ச்சி கொண்ட இலக்குவனின்; உள்
இடர் -
மனத்துன்பத்தை;நோக்கினான் - பார்த்து; சோக பங்கம் - இவ்
இளையவனது துன்பத்தால்ஏற்பட்ட மனச் சோர்வு; துடைப்பு அரிதால்’ -
போக்குவது  இயலாது;  எனா -என்று  கருதி.

     ‘ஆக’ என்பது உரையசை. ‘ஆல்’ அசை.                      54