தூதுவர் பதிலும் பரதன் விசாரிப்பும் 2104. | ‘வலியன்’ என்று அவர் கூற மகிழ்ந்தனன்; ‘இலை கொள் பூண் இளங்கோன் எம்பிரானொடும் உலைவு இல் செல்வத்தனோ?’ என, ‘உண்டு’ என, தலையின் ஏந்தினன், தாழ் தடக் கைகளே. |
அவர்- அத் தூதுவா; ‘வலியன்’ என்று கூற- (தயரதன்) நலமாக உள்ளான் என்று கூற;மகிழ்ந்தனன்- (அது கேட்டுப் பரதன்) மகிழ்ச்சி அடைந்தான்; (பின்னர்ப் பரதன்)‘எம்பிரானொடும்- எம் தலைவனாகிய இராமபிரானொடும்’ இலைகொள் பூண் இளங்கோன் -இலைத்தொழிலாற் சிறப்புற்ற அணிகளை அணிந்த இளைய பெருமாளாகிய இலக்குவன்; உலைவு இல்செல்வத்தனோ’- தளர்ச்சியும் தடுமாற்றமும் இல்லாத செல்வம் உடையவனாய் இருக்கின்றானோஎன்று கேட்க; ‘உண்டு’ என- (அத் தூதுவர் அங்ஙனமே அவர்களும் குறையின்றி) நலமாய்இருக்கின்றார்கள் என்று கூறு; தாழ்தடக் கைகள்- தாள் அளவாக நீண்ட கைகளை; தலையில்ஏந்தினன்- (இராம லக்குவர்கள் உள்ள திசை நோக்கிப் பரதன்) தலைமேல் வைத்து வணங்கினான். ‘வலியன்’ என்றது நிகழ்வை நோக்கப் பொய்தான்; எனினும் யாதொன்றும் தீமை இலாதசொல்லும் வாய்மை என உணர்க. இராமனை உடன் காத்து இணைபிரியாது இருத்தலின் ‘இளங்கோனை’முதலிற் கூறினார். ‘ஓடு’ உருபு இங்கே உயர்ந்த இராமன் மேல் வந்தது; “ஒருவினை ஒடுச்சொல்உயர்பின் வழித்தே” என்பவாகலின். (தொல். சொல். வேற். மயங். 8) மனக்குறைவும், உடல்தளர்வும் இல்லாமல் இருப்பதே செல்வம் ஆகும். “செல்வம் என்பது சிந்தையின் நிறைவே” (குமர -திரட்டு - 475) ‘நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பவாதலின், ‘உலையில் செல்வத்தனோ’ என்பதனுள் எல்லாம் விசாரித்தானாக ஆயிற்று. முன் பாட்டிற்போல் ‘இராமன்அரகச் செல்வத்தைப் பெற்றுத் தற்போது இழந்துள்ளான்’ என்பது பரதன் சொல்வழிஅவனையறியாமலே வந்ததை ‘உலைவு இல் செல்வத்தனோ’ என்பது குறிப்பிடும். இது குறிப்புமொழி. |