2116. | நிறைந்த மாந்தர் நெருங்கினர் நெஞ்சினில், ‘பறந்து போதும்கொல்’ என்று, பதைக்கின்றார், பிறந்த, தேவர், உணர்ந்து, பெயர்ந்து முன் உறைந்த வான் உறுவார்களை ஒக்கின்றார். |
நெருங்கினர் நிறைந்த மாந்தர்- ஒருவரோடு ஒருவர் நெருங்கிய அறிவால் நிறைந்த மக்கள்; நெஞ்சினில்- தம் மனத்தில்; ‘பறந்து போதும் கொல்’ என்று- பறந்து சென்று விடுவோமா (அயோத்திக்கு) என்று கருதி; பதைக்கின்றார்- துடிக்கின்றார்;(இவர்கள்) தேவர்- தேவர்கள்; பிறந்து- சாபத்தால் மண்ணிற் பிறந்து; உணர்ந்து - பாச நீக்கத்தால் (அறிவுணர்ந்து) தாம் தேவர் என அறிந்து; பெயர்ந்து - இம்மண்ணுலகை விட்டு நீங்கி; முன் உறைந்த வான் - தாம் முன்பு வாழ்ந்த தேவருலகை; உறுவார்களை - அடைய விரைகின்றவர்களை; ஒக்கின்றார்- ஒப்பவராய் உள்ளார்கள். சாப நீக்கம் தேவர்கள் தம் வான் உலகு செல்லத் துடித்தலும் விரைதலும் பரதன் உடன் செல்வார் அயோத்திக்கு விரைந்து செல்லத் துடித்தலுக்கு உவமை. இவர்களின் பதைப்பையும் விரைவையும் ‘பறந்து போதும்’ என்பது விளக்கும். ‘கொல்’ ஐயம். 15 |