2118.ஊறு கொண்ட முரசு உமிழ் ஓதையை
வீறு கொண்டன, வேதியர் வாழ்த்து ஒலி;
ஏறு கொண்டு எழும் மல்லர் இடிப்பினை
மாறு கொண்டன, வந்திகர் வாழ்த்து அரோ!

     ஊறுகொண்ட-(குறுந்தடியால்) அடிக்கப்படுகின்ற; முரசுஉமிழ்
ஓதையை
-முரசம் வெளிவிடும் பேரொலியை; வேதியர்-வேதம் வல்ல
அந்தணர் (கூறும்); வாழ்த்துஒலி- வாழ்த்தும்ஒலியானது; வீறு
கொண்டன
-(கீழ்ப்படுத்தி) மேம்பட்டு ஒலித்தன; வந்நிகர்வாழ்த்து-
(அரசனைத்) துதிக்கும் பாடல் ஒலி; ஏறுகொண்டு எழு மல்லர்-ஏற்றின்
தன்மை படைத்து (வீரத்தோடு) எழுகின்ற வீர மற்றவர்களின்; இடிப்பினை-
வீர முழக்கத்தை; மாறுகொண்டன-பகைத்தனவாய்ப் பேரொலியாயின.

     மென்மையான வேதியர் வாழ்த்தும், வந்நிகர் வாழ்த்தும் வன்மையான
முரசொலியையும், மல்லர் முழக்கத்தையும் கீழ்ப்படுத்தின என்பதால்
அவற்றின் மிகுதி கூறியவாறு. ‘அரோ’ அசை.                       17