2125. | பாடல் நீத்தன, பண் தொடர் பாண் குழல்; ஆடல் நீத்த, அரங்கொடு அகன் புனல்; சூடல் நீத்தன, சூடிகை; சூளிகை மாடம் நீத்தன, மங்கல வள்ளையே. |
பண் தொடர்- இசையொடு தொடர்ந்த; பாண் குழல்- இசைக்கின்ற வேய்ங்குழல்கள்; பாடல் நீத்தன - இசை பாடுதலை ஒழிந்தன; அரங்கொடு அகன் புனல்- நாட்டிய அரங்குகளோடு அகன்ற நீர்நிலைகள்; ஆடல் நீத்த - ஆடுதலை ஓழிந்தன; சூடிகை- தலை உச்சி; சூடல் நீத்தன - மலர் சூடுதலை ஒழிந்தன; சூளிகை மாடம் -நிலாமுற்றத்தை உடைய மாளிகைகள்; மங்கல வள்ளை நீத்தன - மங்கலப் பாடல்கள் பாடப் பெறுதலை ஒழிந்தன. ஆடல் - சிலேடையால் இருபொருள் தந்தது. நடனமாடல், நீராடல் என்பன முறையேஅரங்கிற்கும் நீர்நிலைக்கும் ஆயின. ‘புனல்’ என்பது யாற்று நீரைக் குறிக்கும். சூடிகை -உச்சி, ‘சூடா’ என்னும் வடசொல் ‘சூடி’ என்றாகி ‘க’ ப்ரத்யயம் பெற்று ‘சூடிகை’ என்றாகியது.வள்ளைப்பாட்டு - உரற்பாட்டு. தம்தலைவனைப் புகழ்ந்தும் மற்றவரைக் குறைத்தும் பாடுதலின் ஏற்றிழிவுடைய உரற்பாட்டாகும். ‘கொற்ற வள்ளை’ என்று புறத்திணையில் வரும் துறையும்இக்கருத்தினதே. குறைத்துப்படாது புகழ்ந்து பாடுதல் மட்டும் வருதலின் ‘மங்கள வள்ளை’என்பர். இப்பெயரில் ஒரு சிறு பிரபந்தம் உண்டு. ‘ஏ’ ஈற்றசை. 24 |