பரதன் தயரதன் வாழுமிடத்தை அடைதல் 2140. | அனைய வேலையில், அக் கடைத் தோரண மனையின் நீள் நெடு மங்கல வீதிகள் நினையும் மாத்திரத்து ஏகிய நேமியான் தனையனும், தந்தை சார்விடம் மேவினான். |
அனைய வேலையில் - இவ்வாறு உரையாட்டு நிகழும் பொழுதில்; அக்கடைத் தோரணமனையின் - அந்த வாயிலிற் கட்டிய தோரணக் கொடிகளையுடைய மாளிகைகளால்; நீள் நெடுமங்கல வீதிகள் - நெடிதுயர்ந்த மங்கலம் பொருந்திய தெருக்களை; நினையும்மாத்திரத்து - நினைக்கும் பொழுதிற்குள் (கணப் பொழுதில்); ஏகிய - கடந்து சென்ற; நேமியான் தனையனும் - சக்கரவர்த்தி தயரதன் குமாரனாகிய பரதனும்; தந்தை - தன்தந்தையாகிய தயரதன்; சார்வு இடம் - வழக்கமாகத் தங்கியுள்ள அரண்மனையை; மேவினான் - சென்று அடைந்தான். நேமி - சக்கரம். நேமியான் - ஆணைச் சக்கரம் உடைய அரசன்; இங்குத் தயரதன்.பரதன் தான் கண்ட காட்சிகளால் முன்பே “மன்னன் வைகும் வளநகர் போலும் ஈது?” என்று (2137)ஐயப்பட்டான் ஆதலின், அரசனை முதலிற் பார்க்க விரும்பினான். நெடுந் தெருக்கள் பல கடந்து அரச மாளிகையை அடைந்தான் என்க. 39 |