தாயுரை கேட்ட பரதன் மூர்ச்சித்தல் 2146. | எறிந்தன கடிய சொல் செவியுற் எய்தலும், நெறிந்து அலர் குஞ்சியான், நெடிது வீழ்ந்தனன்; அறிந்திலன்; உயிர்த்திலன் ;- அசனி ஏற்றினால் மறிந்து உயர் மராமரம் மண் உற்றென்னவே. |
எறிந்தன- வேல் எறிந்தாற் போன்ற; கடிய சொல் -(கைகேயியின்) கொடுஞ்சொல்; செவியுள் எய்தலும் - காதிற்குள்நுழைந்தவுடன்; நெறிந்து அலர் குஞ்சியான் - படிப்படியாக நெறிப்புடைத்தாய் விரிந்த தலைமயிரை உடைய பரதன்; அசனிஏற்றினால் - பேரிடியால்; உயர்மராமரம்-ஓங்கி வளர்ந்த மராமரமானது; மறிந்து மண் உற்றென்ன- ஒடிந்து மண்ணிலே விழுந்ததுபோல; நெடிது வீழ்ந்தனன் - நீண்டுவிழுந்த; அறிந்திலன் - அறிவு கெட்டு; உயிர்த்திலன் - மூச்சற்றவனாய்க்கிடந்தான். இடியேறுண்ட மராமரம் கைகேயி சொற்கேட்டு வீழ்ந்த பரதனுக்கு உவமை ஆயிற்று, அசனி -இடி-இடிஏறு என்பது ஆண்மை மிக்க இடி எனப்பெறும்; அஃதாவது பேரிடி. ‘ஏ’ ஈற்றசை. 45 |