பரதன் கொண்ட சீற்றம் 2167. | சூடின மலர்க் கரம், சொல்லின் முன், செவி கூடின; புருவங்கள் குனித்துக் கூத்து நின்று ஆடின; உயிர்ப்பினோடு, அழல் கொழுந்துகள் ஓடின; உமிழ்ந்தன, உதிரம் கண்களே! |
சூடின மலர்க்கரம் - தாய்முன் தலைமேற் குவித்திருந்த பரதன் கரமலர்கள்; சொல்லின்முன் - கைகேயி கூறிய வார்த்தை செவியை அடைதற்கு முன்னால்; செவி கூடின- காதுகளைப் பொத்திக் கொண்டன; புருவங்கள் குறித்து நின்று கூத்து ஆடின -(பரதன்) புருவங்கள் வளைந்து நின்று மேலே ஏறியும் கீழே இறங்கியும் நடனமிடுவனவாயின; உயிர்ப்பினோடு - அவன் மூச்சுக் காற்றுடனே; அழல் கொழுந்துகள் - நெருப்புச்சுவாலைகள்; ஓடின - வெளிவந்தன; கண்கள் உதிரம் உமிழ்ந்தன - கண்கள் இரத்ததைக்கக்கின. கைகேயியின் கடுஞ்சொல் கேட்கப் பிடிக்காமல் பரதன் செவிகளைப் பொத்தினன். புருவம்வளைதல் மேலும் கீழுமாதல், மூச்சுக்காற்று வெப்பமாய் வெளிப்படுதல், கண் கோவைப்பழம் போல்சிவத்தல் (உதிரம் கான்றல்) இவை சினத்தின் மெய்ப்பாடுகளாம். ‘ஏ’ ஈற்றசை. 65 |