2178.‘ஒன்றும் பொய்யா மன்னனை வாயால், உயிரோடும்
தின்றும், தீரா வன் பழி கொண்டீர்; திரு எய்தி
என்றும் நீரே வாழ உவந்தீர்; அவன் ஏக,
கன்றும் தாயும் போல்வன கண்டும் கழியீரே!

     ‘ஒன்றும் பொய்யா மன்னனை - சிறிதளவும் வாய்மையில் தவறாத
தயரத மன்னனை; வாயால் - (வரமாய) வாய்ச்சொல்லால்; உயிரோடும்
தின்றும்
- உயிரோடு தின்றுவைத்தும்; தீரா வன் பழி கொண்டீர் -
உலகுள்ளவும் விட்டு நீங்காத கொடும் பழியைத்தேடிக்கொண்டீர்; அவன்
ஏக
- அந்த மன்னன் இறந்துபட; திரு எய்தி - அவனுக்குரிய அரசுச்
செல்வத்தை அடைந்து; நீரே என்றும் வாழ உவந்தீர் - நீரே என்றைக்கும்
வாழ வேண்டும்என மகிழ்ந்தீர்!; கன்றும் தாயும் போல்வன கண்டும் -
தாயும் கன்றும் போலஒன்றியிருந்து அன்பு செய்யும் பொருள்களைக் கண்டு
வைத்தும் (கன்றாகிய இராமனைப் பிரிந்துவாழத் தாயாகிய உம்மால்
எவ்வாறு இயன்றது); கழியீரே - உம் மனக்கருத்தைமாற்றிக்கொள்ளீரே!’

     ‘யார் எப்படிப்போனால் என்ன; நான் வாழ்ந்தால், போதும்’ எனக்
கைகேயி நினைத்ததைப் பரதன் சுட்டிப் பழித்தான். ‘கழியீரே’ என்பது
கழிதல் - பழையன நீங்குதல் - கழியீரே - எதிர்மறை.  நீங்க மாட்டீரே -
பழைய உம் கருத்தை மாற்றிக்கொள்ள மாட்டீரே என்றான்.  அதற்குக்
‘கன்றும் தாயும் போல்வன கண்டும்’ என்பது சான்று.உலகில் கன்றும் தாயும்
பாசத்தால் நெருங்கி வாழ்வதுபோல் இராமனிடத்தில் உங்கள்தாய்ப்பாசம்
சிறந்திருந்தால் அவன் காடு போக நேர்ந்திராது என்றானாம். இனி
இவ்வடிகளுக்குஇராமன் வனம் ஏகிய போது, நாட்டில் உள்ள மக்கள்
எல்லாம் கன்றைத் தொடரும் தாய் போலஅவன் பிரிவால் துயருற்றுப் பின்
தொடர்ந்தும் அவலித்தும் சென்ற நிகழ்ச்சியைக்கண்டுவைத்தும் உமது
கருத்தைக் கழியீரே என்று பொருள் உரைப்பதும் உண்டு. நாட்டார்
அனைவரும் இராமன்பால் அன்புடையராய் இருப்பதைக் கண்டும்
இராமனைக் காட்டிற்குச் செல்லச் செய்து  நீர்யாரை ஆளப் போகிறீர்
என்று சொன்னான் எனக் கருதலாம். இப்பொருளில் அயோத்தியில் இராமன்
காடேகிய போது நாடெல்லாம்  உடன் தொடர்ந்து  சென்ற செய்தி பரதன்
செவிப்பட்டதாகக்கொள்ள வேண்டிவரும். அங்ஙனம் கொண்டால் இதுவரை
பரதன் கைகேயியை வினாவிய வினாக்கள்பொருளற்றுப் போகும் என்னும்
குறையுண்டு. ஏற்பன அறிக. இனி இப்பாட்டில், அவன் ஏக - அந்தஇராமன்
கானகம் செல்ல என்றும் உரைக்கலாம். ‘அவன் ஏக’ என்பதனை
முன்மாற்றாது நேரே கொண்டு‘அவன் ஏக,
கன்றும்தாயும் போல்வன
கண்டும் கழியீரே’ எனக் கூட்டி, இராமன் வனம் செல்ல, கன்றும்தாய்ப்
பசுவும் போன்ற அஃறிணைப் பொருள்களின் பிரியாது தொடரும் தன்மை
கண்டு வைத்தும் உம்கொடுமை நீங்கப் பெறீர்’ என்றானாம்.           77