பரதன் இனிச் செய்யவுள்ள தன் செயல் கூறுதல்  

2187.‘ஏன்று, உன் பாவிக் கும்பி வயிற்றினிடை வைகித்
தோன்றும் தீராப் பாதகம் அற்று, என் துயர் தீர,
சான்றும்தானே நல் அறம் ஆக, தகை ஞாலம்
மூன்றும் காண, மா தவம் யானே முயல்கின்றேன்.

    ‘பாவி உன் கும்பி வயிற்றினிடை- பாவியாகிய உன்னுடைய
வயிற்றிடத்தில்; ஏன்று வைகித் தோன்றும் - உடன்பட்டுத்தங்கிப்
பிறந்ததனால் உண்டாகிய; தீராப் பாதகம் - நீங்காத அரிய பாவம்; அற்று-
அடியோடு இல்லையாகி; என் துயர் தீர - (தந்தை இறந்தது; இராமன் காடு
சென்றது ஆகிய நிகழ்ச்சிகளால் ஆய) என் துயரமெல்லாம் தீரும்படி; நல்
அறம் தானேசான்றும் ஆக
- நன்றாகிய அறக்கடவுளே சாட்சி ஆகப்
பொருந்த; தகை ஞாலம் மூன்றும் - மேம்பாடுடைய மேல், கீழ், நடு
என்னும் மூவுலகமும்; காண - (என்

நிலை) காணும்படி; யானே மாதவம் முயல்கின்றேன் - நானே பெருந்தவம்
செய்ய இருக்கின்றேன்.’

     பரதனுக்கு அரசுரிமை கைகேயி வயிற்றில் இருந்து  பிறந்ததனால்
உண்டாயது; ஆகவே. அதனைப்பாதகம் என்றான். ‘சான்றும்’ ‘உம்’
இசைநிறை. ‘பழிதீர்தற்குரிய என் செய்வினை’ என்றுமேற்பாட்டிற் கூறினான்.
அது  இன்னது  என்பது  ‘மாதவம்’ என இப்பாட்டிற் கூறினாள் ஆயிற்று.
கும்பி வயிறு  - இரு பெயரொட்டு;  கும்பி - சேறு என்றும் பொருள்படும்.
அப்பொருள் கொண்டால்சேறு போன்ற பாவம் நிறைந்த வயிறு
என்றாகும்.                                                   86