2270.ஈசன் இவ் உலகினை அழிக்கும் நாள் எழும்
ஓசையின் நிமிர்ந்துளது, ஒல்லென் பேர் ஒலி;
காசையின் கரியவற் காண மூண்டு எழும்
ஆசையின் நிமிர்ந்தது அவ் அனிக ராசியே.

     ‘ஒல்’ என் பேர் ஒலி - (சேனைகளின் எழுச்சியால் உண்டாகிய)
‘ஒல்’ என்றபெரிய ஆரவாரம்;  ஈசன் - (அழித்தற் கடவுளாகிய) சிவன்;
இவ் உலகினை அழிக்கும்நாள் - இந்த உலகினை அழித்துச் (சர்வ
சங்காரம்) செய்யும் காலத்தில்; எழும்ஓசையின் - எழுகின்ற
பேரோசையைவிட;  நிமிர்ந்துளது - மேற்சென்றுளது; அவ்அனிகராசி -
அந்தச் சேனைத் தொகுதி; காசையின் கரியவன் - காயாம்பூப் போலும்
கருநிறமுடைய இராமனை;  காண மூண்டு எழும் ஆசையின் -
காண்பதற்காக உள்ளே கிளர்ந்து எழுகின்ற ஆசையைக் காட்டிலும்;
நிமிர்ந்தது - மேற்சென்றுவிட்டது (அதிகமாய் உள்ளது.)

     ஈசன் என்பது சிவனுக்குரிய சிறப்புப் பெயர். “ஈசன் ஆண்டிருந்த
பேர் இலங்கு மால்வரை”(3360.) என்பது காண்க. காசை - காயாம்பூ. “நீல
நெடுங்கிரியும் மழைமுகிலும் பவ்வ நெடு நீரும்காயாவும் நிகர்க்கும் மேனிக்,
கோலமும்” (வில்லி. 45.247.) என்பது திருமாலின் திருமேனிநிறத்துக்குக்
காயாம்பூவை உவமை கூறிற்றாம். காசு- குற்றம் என்பார் உளர். ‘காசை’ என
வருதலின் அது  பொருந்தாது. ‘காசில்’ என்று வரின் பொருந்தும். ‘காசில்
கொற்றத் திராமன்’என்பது (4) போல, காசு - ஐ எனப் பரித்து ‘ஐ’ சாரியை
என்றாலோ எனின், அவ்வாறு சாரியைகூறுவது  ஓர் மரபின்மையே அன்றி
வேறின்றி. ஏற்குமேற் கொள்க. ‘ஓசையின்’, ‘ஆசையின்’இரண்டிடங்களிலும்
‘இன்’ உறழ்ச்சிப் பொருட்டு. ‘காசையின்’  ‘இன்ழு உவமப் பொருட்டு. ‘ஏ’
காரம் ஈற்றசை.                                               27