பரதன் மரவுரி அணிந்து சத்துருக்கனனுடன் தேரில் சேறல்  

2295.இன்னணம் நெடும் படை ஏக, ஏந்தலும்,
தன்னுடைத் திரு அரைச் சீரை சாத்தினான்;
பின் இளையவனொடும், பிறந்த துன்பொடும்,
நல் நெடுந் தேர்மிசை நடத்தல் மேயினான்.

     இன்னணம் - இவ்வாறு; நெடும்படை ஏக - பெருஞ்சேனை செல்ல;
ஏந்தலும் - பரதனும்; தன்னுடைத் திரு அரை - தன்னுடைய அழகிய
இடுப்பிலே;  சீரைசாத்தினான் - மரவுரியைத் தரித்து; பின்
இளையவனொடும் -
பின்னே தொடர்ந்துவரும் தம்பியாய
சத்துருக்கனனொடும்; பிறந்த துன்பொடும் - (மனத்துள்) தோன்றியதுக்கத்
தோடும்; நல்நெடுந் தேர்மிசை - நல்ல பெரிய தேர்மீது ஏறி; நடத்தல்
மேயினான் -
(வனத்துக்குச்) செல்லத் தொடங்கினான்.

     ‘திருஅரை சீரை சாத்தினான்’ என்றது இதுகாறும் சிறப்பு மிக்க
பொன்னாடைகளை அணிந்தது என அதன் சிறப்பு உணர்த்தற்கு. மேலும்
மேலும் பரதனுக்குத் துக்கம் பொங்குதலைப் ‘பிறந்ததுன்பொடும்’ எனக்
குறித்தார்.                                                    52