தாயர் முதலியோர் பரதனுடன் வருதல்  

2296.தாயரும், அருந் தவத்தவரும், தந்தையின்
ஆய மந்திரியரும், அளவு இல் சுற்றமும்,
தூய அந்தணர்களும், தொடர்ந்து சூழ்வரப்
போயினன் - திரு நகர்ப் புரிசை வாயிலே.

     தாயரும் - (கோசலை, கைகேயி, சுமித்திரை முதலிய) தாய்மார்களும்;
அருந்தவத்தவரும் - செய்தற்கரிய தவத்தைச் செய்த முனிவர்களும்;
தந்தையின் ஆயமத்திரியரும் - தன் தந்தையாகிய தயரதன் கண்
பொருந்திய மந்திரிமார்களும்;  அளவுஇல் சுற்றமும் -அளவிட முடியாத
பலவாகிய சுற்றத்தார்களும்;  தூய அந்தணர்களும் -தூய்மையான
வேதியர்களும்; தொடர்ந்து  சூழ்வர - தன்னைப் பின்பற்றிச் சுற்றிவர;
திருநகர்ப் புரிசை வாயில் போயினன் - அழகிய அயோத்தி நகரத்து
மதிலின் (முதன்மையான)வாயிலைச் சென்றடைந்தான்.

     தந்தை போலப் பாராட்டத் தகும் மந்திரியர் என்றும் ஆம். அளவில்
சுற்றம் -உறவினர்களையும்,  அரசச் சுற்றத்தையும் குறிப்பிடும்.  இராமனை
அழைத்து  வருதலில்அனைவர்க்கும் உள்ள ஆர்வ மிகுதி இதனால்
புலப்படும். ‘ஏ’ காரம்  ஈற்றசை.                                 53