பரதன் இராமன் தங்கிய சோலையில் தங்குதல் 2300. | மொய் பெருஞ் சேனையும் மூரி ஞாலமும் கைகலந்து அயல் ஒரு கடலின் சுற்றிட, ஐயனும் தேவியும் இளைய ஆளியும் வைகிய சோலையில் தானும் வைகினான். |
மொய் பெருஞ் சேனையும் - நெருங்கிய பெரிய சேனையும்; மூரி ஞாலமும் - பெருமை பொருந்திய அயோத்தி மக்களும்; கைகலந்து - ஒன்று திரண்டு; அயல் ஒருகடலின் சுற்றிட - பரதனின் பக்கல் ஒரு கடல் போலச் சுற்றியிருப்ப; ஐயனும் தேவியும்இளைய ஆளியும் வைகிய சோலையில் - இராமனும், சீதையும், இளைய யாளிபோல்வானாகிய இலக்குவனும் தங்கியிருந்த அந்தச் சோலையிலேயே; தானும் - (பரதன்) தானும்; வைகினான் - (அன்று) தங்கினான். பரதன் இராமன் முதலில் தங்கியிருந்த சோலையில் தங்கினன் - அன்பு கலந்துறவு கொண்டநெஞ்சம் உடையவர்களுக்குப் பயின்ற பொருள்களைக் கண்ட வழி பயின்றாரையே கண்டாற் போலும்ஆதலின் இராமன் தங்கிய சோலை பரதனுக்குத் துயராற்றும் மருந்தாயிற்று. ஆளி - உவமையாகுபெயர். 57 |