2386.ஏந்து செல்வத்து இமையவர் ஆம் என,
கூந்தல் தெய்வ மகளிர் கொண்டாடினார் -
வேந்தர் ஆகி, சிவிகையின் வீங்கு தோள்
மாந்தர்காறும், வரிசை வழாமலே,

    வேந்தர் ஆதி- (பரதன் சேனையில் உள்ள) அரசர் முதலாக;
சிவிகையின் வீங்கு தோள் மாந்தர்காறும்- பல்லக்குத் தூக்குதலால்
பருத்த தோளை உடைய மனிதர்கள்வரை; வரிசை வழாமல் -
அவரவர்க்குரிய முறைமையில் சிறிதும் குறைவுபடாமல்; கூந்தல் தெய்வ
மகளிர்
-கூந்தலழகையுடைய தெய்வப் பெண்கள்; ஏந்து  செல்வத்து
இமையவர் ஆம் என
- மிக்கசெல்வத்தை உடைய தேவர்களைக்
கொண்டாடுவதுபோல;  கொண்டாடினார் - பாராட்டிஉபசரித்தார்கள்.

     மேலோர் முதல்கீழோர்காறும் ஒரு நிகராக இமையர் போல இன்பம்
நுகர்ந்தபடியைக்கூறினார். ‘வேந்தர் சிவிகையின் வீங்குதோள் மாந்தர்’
என்பது
மேல், கீழ்நிலைகளைச் சுட்டி நின்றது - “சிவிகை பொறுத்தானோடு
ஊர்ந்தானிடை” (குறள் 37.) என்பது காண்க. கூந்தல் அழகு பிற
அழகுகளுக்கும் உபலக்கணையாம்.“குஞ்சி அழகும்” “மயிர் வனப்பும்”
என்பன (நாலடி. 131. சிறுபஞ்ச. 35) காண்க. “ஏந்துசெல்வத் திமையவர்”
என்றது  உலகில் மனிதர் செல்வத்தை ஏந்துவர்; ஆனால் இமையவரைச்
செல்வம் ஏந்துகிறது என்ற நயம் பற்றி ‘ஏ’ ஈற்றசை.                   12