2389. | மான்று, அளிக் குலம் மா மதம் வந்து உண, - தேன் தளிர்த்த கவளமும், செங் கதிர் கான்ற நெல் தழைக் கற்றையும், கற்பகம் ஈன்று அளிக்க, நுகர்ந்தன - யானையே. |
யானை - (அச்சேனையில் உள்ள) யானைகள்; அளிக்குலம்- வண்டுக் கூட்டங்கள்; மா மதம் - (தம்முடைய) பெரிய மதநீர்ப் பெருக்கை; வந்து மான்றுஉண - வந்து உண்டு மயங்க; (தாம்) கற்பகம் - கற்பக மரங்கள்; தேன்தளிர்த்த கவளமும் - தேன் மிகுதியாகக் கலக்கப்பெற்ற உணவுருண்டையையும்; செங்கதிர்கான்ற நெல்தழைக் கற்றையும் - சிவந்த கதிர்களை யீன்ற நெற்பயிரின்கதிர்க்கட்டுகளையும்; ஈன்று அளிக்க - பெற்று உண்ணத் தர; நுகர்ந்தன -அவற்றை உண்டு இன்புற்றன. யானைகள் உண்டபடி கூறினார். மதநீரை வண்டுகள் உண்ண. தாம் கற்பகம் தந்த கவளமும்தழையும் உண்டன என்றார். நெய்மிதி கவளம் தரல் யானைக்கு வழக்கம். இங்குத் தேன் மிதிகவளம் என்றது தேவருலகத்துச் சிறப்பாம். ‘ஏ’ ஈற்றசை. 15 |