2429.அயாவுயிர்த்து, அழு கணீர் அருவி மார்பிடை,
உயாவுற, திருஉளம் உருக, புல்லினான் -
நியாயம் அத்தனைக்கும் ஒர் நிலயம் ஆயினான் -
தயா முதல் அறத்தினைத் தழீஇயது என்னவே.

     நியாயம் அத்தனைக்கும் ஒர் நிலயம் ஆயினான் - எல்லா
நேர்மைகளுக்கும் ஒப்பற்றஇருப்பிடமாக உள்ள இராமன்; தயாமுதல் -
அருள் தெய்வம்; அறத்தினைத் தழீஇயது என்ன - தருமதேவதையைத்
தழுவிக்கொண்டாற் போல; அயா உயிர்த்து - பெருமூச்சு விட்டு; அழு
கண் நீர்
- அழுகின்ற கண்களிலிருந்து வரும் நீர்; மார்பிடை -
மார்பிடத்தில்; அருவிஉயாவுற - அருவிபோலத் தழுவிப்பெருக; திரு
உளம் உருக
- உள்ளே அழகிய மனம்கரைந்துருக; புல்லினான் -
(பரதனைத்) தழுவினான்.

     கருணைக் கடவுள் - இராமன், அறக்கடவுள் - பரதன். இராமன்
பரதனைத் தழுவியது கருணை அறத்தைத் தழுவியது போலாகும். அறம்
செயற்பாடு - கருணை - பயன்பாடு. காரணமின்றிப் பிறவுயிர் படும் துன்பம்
கண்டு பெருகி வரும் இரக்கம் தயாவாகும். இறைவனைத் ‘தயாமூல தன்மம்’
என்பர் அப்பர் திருநா. 6-20: 6) இங்கே தயாமுதல் எனப்பெற்றது.
புறத்தேயும் அகத்தேயும் உருகியது கண்ணீராலும், திருவுளம் உருக
அயாவுயிர்த்ததாலும் புலனாயிற்று. ‘ஏ’ காரம் - ஈற்றசை.               55