2431. | அரியவன் உரைசெய, பரதன், ‘ஐய! நின் பிரிவு எனும் பிணியினால், என்னைப் பெற்ற அக் கரியவள் வரம் எனும் காலனால், தனக்கு உரிய மெய்ந் நிறுவிப் போய், உம்பரான்’ என்றான். |
அரியவன் - அறிதற் கரியவனாய இராமன்; உரை செய - வினாவ; பரதன்-; ‘ஐய! - இராமனே!; நின் பிரிவு என்னும் பிணியினால்- நின்னைப் பிரிந்த பிரிவு என்னும் நோயினாலும்; என்னைப் பெற்ற அக் கரியவள் -என்னை ஈன்றெடுத்த அந்தக் கொடியவளாய கைகேயியின்; வரம் எனும் காலனால் - வரம்என்கின்ற யமனாலும்; தனக்கு உரிய மெய் நிறுவிப்போய் - தனக்குரிய சத்தியத்தைஉலகில் நிலைநிறுத்திச் சென்று; உம்பரான்” - (இப்போது) தேவர் உலகத்தில் உள்ளான்; என்றான் - இறப்பிற்குக் காரணம் வேண்டும்; அது இராமனைப் பிரிந்த பிரிவு என்னும் நோய் ஆயிற்று. யமன் - கைகேயி பெற்ற வரம். தயரதன் வாய்மையைக் காப்பாற்றி உயிர் துறந்தான் என்பதை இங்ஙனம் கூறினான் பரதன். 57 |