2445. | ‘ “உண்மை இல் பிறவிகள், உலப்பு இல் கோடிகள், தண்மையில் வெம்மையில் தழுவின” எனும் வண்மையை நோக்கிய, அரிய கூற்றின்பால், கண்மையும் உளது எனக் கருதல் ஆகுமோ? |
‘(உயிர்களுக்கு), “உண்மை இல் பிறவிகள் - நிலையில்லாதனவாகிய பிறப்புகள்; உலப்பு இல் கோடிகள் - அளவில்லாத கோடிக் கணக்கானவை; (அவை) தண்மையில்வெம்மையில் தழுவின” - இன்பத்தாலும் துன்பத்தாலும் உண்டாகப்பெற்றவை; எனும் -என்ற; வண்மையை - வளமாக நூல்களில் கூறப்பெற்றவற்றை; நோக்கிய - நன்குபார்த்து அறிந்தபின்பு; அரிய கூற்றின்பால் - கொடிய யமனிடத்தில்; கண்மையும் உளது என - கண்ணோட்டமும் இருக்கின்றது என்று; கருதல் ஆகுமோ - நினைக்கக்கூடுமோ? (கூடாது) இன்ப துன்பங்கட்கேற்பப் பல பிறவிகள் எடுக்கும் உயிர்கல் அவை தீர்ந்த பிறகு இறக்கின்றன. இதில் யமன் கண்ணோட்டம் உடையவனாதல் வேண்டும் எனக் கருதல் எற்றுக்கு என்பதாம். கண்மையாவது கண்ணின் தன்மை; அது கண்ணோட்டம். பிறர் துன்பம் கண்டு அவர்மாட்டுக் கண் ஓடியவழிச் செய்யப்படுவது ஆதலின், கண்மை எனப்பெற்றது. 71 |